திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரசன்னகுமார், இ.கா. ப., மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் (கிழக்கு) ஆகியோர் 37 ஆவது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஆயுதப்படை மைதானத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இப்பேரணியில், போக்குவரத்து காவலர்கள், ஆயுதப் படை காவலர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் 112 வாகனங்களுடன் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியானது, ஆயுதப்படை வளாகத்தில் இருந்து தொடங்கி பாளையங்கோட்டை முருகன்குறிச்சி, வண்ணார்பேட்டை வழியாக புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
37- ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா, இம்மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஒருமாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நமது மாநிலத்திலும், நமது மாவட்டத்திலும் சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு என்ற வாசகத்துடன் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வின் மூலம் மக்களுக்கு சாலை பாதுகாப்பின் அவசியத்தை அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி, சாலை விபத்துகள் இல்லாத நிலையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவது, சாலை விதிமுறைகளை பின்பற்றுதல், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தி விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பத்மப்ரியா, ராஜேஷ், ராஜசேகர், உதவி கோட்டப் பொறியாளர் (சாலைப் பாதுகாப்பு) ஜே.சசிகலா, போக்குவரத்து காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















