திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37). என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 4 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 10 சவரன் வரதட்சனை கேட்டு, 5 சவரன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில் 4 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. சீர்வரிசை பொருட்களும், பைக் ஒன்றும் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மூத்த மருமகள் 12 சவரன் வரதட்சணை கொண்டு வந்ததாகவும் பாக்கியுள்ள 1 சவரன் நகையை வாங்கி வருமாறு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மறுவீட்டுக்காக நேற்று தாய் வீட்டிற்கு வந்திருந்த லோகேஸ்வரி தமது பெற்றோரிடம் இது குறித்து புகார் தெரிவித்து வேதனையை பதிவு செய்துள்ளார். மேலும் வீட்டு வேலைகளை செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், காலை எழுந்தவுடன் துணி துவைக்க வேண்டும் பாத்திரங்களை தூய்மைப்படுத்த வேண்டும், சோபாவில அமர கூடாது என கூறி மாமியார் குடும்பத்தார் கொடுமைப்படுத்தியதாக தாய் மற்றும் தங்கையிடம் கூறி அழுதுள்ளார். பெரிய மருமகள் அதிக நகைக் கொண்டு வந்ததையும், பாக்கி 1 சவரன் நகையை வாங்கி வருமாறும், வீட்டிற்கு ஏசி வாங்கி கொடுக்குமாறும் தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் கழிவறையில் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் லோகேஸ்வரி வராததை கண்ட அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது கழிவறையிலிருந்து தூக்கிட்ட நிலையில் இருந்து அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைத்து பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணின் கணவர் பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 1 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு