கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், அரவங்காடு கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ரமேஷ்குமார் (38). என்பவர் அரவங்காடு காட்டுக்கொட்டயில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கரியாலூர் காவல் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடமிருந்து 110 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் தொடர்ந்து இது போன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய்சிங் மீனா, இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன்குமார் இ.ஆ.ப., அவர்கள் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ரமேஷ்குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.