கள்ளக்குறிச்சி: கடந்த (20.05.2024)-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் சதீஷ்(25). என்பவர் அதே கிராமத்தில் உள்ள தேநீர் கடையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அடிதடி சண்டையில் ஈடுபட்டுள்ளார். இவர் தொடர்ந்து அடிதடி சண்டை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்மீது வடபொன் பரப்பி காவல் நிலையத்தில் சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த (22.06.2024) மற்றும் (23.06.2024) ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம், விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த கலியன் மனைவி கெளரி(53). என்பவர் தச்சூர் சுடுகாடு அருகேயும் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், பெருங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகன் சத்தியராஜ்(26). ஆகிய இருவரும் ஆலத்தூர் சுடுகாடு அருகேயும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கள்ளக்குறிச்சி காவல் துறையினரால் கையும் களவுமாக கைது செய்து அவர்களிடமிருந்து 63 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர்கள் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தொடர்ந்து இது போன்று சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு.எம்.எஸ்.பிரசாந்த் இ.ஆ.ப., அவர்கள் மேற்படி மூன்று நபர்களையும் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நேற்று (05.07.2024)-ந் தேதி சதீஷ் மற்றும் சத்தியராஜ் கடலூர் மத்திய சிறையிலும், கெளரி வேலூர் பெண்கள் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.