திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை வாசுகி தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முருகன் (38). கூலி வேலை செய்து வரும் இவருக்கும், பத்தமடை பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 14-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என மாணவியின் தந்தை பத்தமடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி திருச்செந்தூரில் இருந்த இருவரையும் பத்தமடைக்கு அழைத்து வந்தனர்.
பத்தமடை காவல் நிலைய கட்டிடத்தில் முதல் தளத்தில் இயங்கி வரும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து மாணவியிடம் விசாரணை நடத்தியபோது மாணவி தனது காதலனுடன் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார். மாணவிக்கு (18) வயது பூர்த்தியாகாததால், அவரை காப்பகத்துக்கு அனுப்புவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மாணவி, மகளிர் காவல் நிலையம் செயல்படும் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த
மாணவியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து மாணவியின் காதலன் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்