தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என facebook விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பின்னர் ஒரு வாட்ஸ்அப் குழுவில் அவரை இணைத்து அதில் ஒரு டிரேடிங் செயலி (Trading App) லிங்க் அனுப்பி அந்த ஆப் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி மேற்படி இளைஞரை நம்பவைத்து ரூபாய் 85 லட்சம் மோசடி செய்த வழக்கில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு ஏற்கனவே ஒரு எதிரியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மேற்படி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சயாஜி ரொகோகலே மகன் சந்திப் சயாஜி ரொகோகலே (33). மற்றும் டட்டு முஞ்சல் மகன் சோபன் டட்டு முஞ்சல் (37). ஆகிய இரண்டு குற்றவாளிகளை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கடந்த (19.11.2025) அன்று மகாராஷ்டிரா மாநிலம் சென்று கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி (22.11.2025) சிறையில் அடைத்தனர். இது போன்று ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் மூலம் வருமானம் போன்ற இணையதளங்களில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் உள்ள லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். மேலும் சைபர் குற்ற புகார்களுக்கு உடனடியாக புகார் எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
















