தென்காசி: தென்காசி மாவட்டம், வடகரையை சேர்ந்த ஜிந்தாமதார் இடைகால் பகுதியில் நகை கடை ஒன்று நடத்தி வரும் நிலையில், அவரை அணுகிய கிருஷ்ணன் தனது நண்பரின் நகையானது வங்கியில் அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையை திருப்ப ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும், அதை வாங்கி விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என ஆசை வார்த்தை கூறியதால், அதனை நம்பிய ஜிந்தா மதார் பணத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ணனுடன் காரில் சென்றுள்ளார்.
இந்நிலையில், வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள வங்கி முன்பு ஜிந்தா மதாரை நிற்க சொல்லிவிட்டு சென்ற கிருஷ்ணன் நீண்ட நேரம் ஆகியும் வராததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜிந்தா மதார் இலத்தூர் காவல் நிலையத்தில் நகை வாங்கித் தருவது போல் நடித்து தன்னுடைய பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு மேற்படி பணத்தை பறித்து சென்ற நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தென்காசி மாவட்டம், சிவகிரி தாருகாபுரம் பகுதியை சேர்ந்த ராமர் பாண்டி மகன் கிருஷ்ணன்(30). பூலாங்குடியிருப்பு பகுதியை சேர்ந்த முகமது ஷரீஃப் மகன் நஸ்ருதீன்(31). மொய்தீன் பிச்சை மகன் ரியாஸ் கான் (22). மற்றும் வடகரை இஸ்மாயில் என்பவரின் மகன் சேக் முகமது மீரான்(31). என்பது தெரியவந்தது. இது தொடர்பாக மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.