திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு திருமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் ரீகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு நடைபெற்றது. இது சம்பந்தமாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உவரி காவல் நிலைய சரகத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கில் சம்பவ இடத்தில் கிடைக்கப்பெற்ற குற்றவாளியின் கைரேகையானது, விஜயநாராயணம் சம்பவ இடத்தில் கிடைக்கப்பெற்ற கைரேகையுடன் ஒத்துப்போனது.
இதனால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி சோமநாதபேரி மரியதாசன் மகன் ஜெயராஜ் என தெரிய வந்ததையடுத்து நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், இ.கா.ப., தலைமையில் விஜயநாராயணம் காவல் ஆய்வாளர், பிரேமா மற்றும் தனிப்படையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். சுமார் 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில், தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்து நடவடிக்கை எடுத்த நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் விஜயநாராயணம் காவல் ஆய்வாளர் பிரேமா, மற்றும் தனிப்படையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்