கிருஷ்ணகிரி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழி எடுக்கப்பட்டது. தேசிய வாக்காளர் தினம் (25.01.2026) கொண்டாடப்பட உள்ள நிலையில் தேர்தலின் போது வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கீழ்கண்ட உறுதி மொழி எடுக்கப்பட்டது.
‘மக்களாட்சி மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம்” என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
















