தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சிலுவையார் கெபி தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் கில்பர்ட் செல்லையன் (73). என்பவர் கடந்த (08.06.2025) அன்று தனது மனைவியுடன் திருவனந்தபுரம் ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த 32 ½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 24,500/- பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து கில்பர்ட் செல்லையன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப அவர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. திருமுருகன் உட்பட காவல்துறையினர் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மினிசகாயபுரம் பகுதியைச் சேர்ந்த டோமினிக் மகன் மரிய அந்தோணி ஆக்னல் (33).ராஜூவ்நகரை சேர்ந்த ரவி மகன் கண்ணன் (22). பீச்ரோடு பகுதியைச் சேர்ந்த கடல் ராஜா மகன் அரவிந்த் (22). மற்றும் தூத்துக்குடி போல்பேட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்த பாலா மகன் மோகன் (34). ஆகியோர் சேர்ந்து மேற்படி கில்பர்ட் செல்லையன் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் நான்கு குற்றவாளிகளையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இதே போன்று கடந்த (19.04.2025) அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்வென்ட் ரோடு பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 14 ¾ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 40,000/- பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் குற்றவாளிகளிடமிருந்து இரண்டு வழக்குகளிலும் சேர்த்து மொத்தம் ரூபாய் 8,75,000/- மதிப்புள்ள 35 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 20,000/- பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.