சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சமுதாய விழிப்புணர்வு நிகழ்வான புகையிலை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் தொடங்கிய இந்நிகழ்வில் காரைக்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் இராமசந்திரன் போக்குவரத்து துறை ஆய்வாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் முத்துவேல் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன் SP.குமரேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 550 பேர் கலந்து கொண்டு புகையிலை ஒழிப்பு கோஷங்களை எழுப்பினர். இப்பேரணியானது கண்ணதாசன் மணி மண்டபம் வரை சென்று நிறைவடைந்தது. இதன் நிறைவு விழாவில் வட்டாச்சியர். இராஜா அவர்களும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன் திரு.SP.குமரேசன் அவர்கள் பேசுகையில், குடும்பத்திற்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டுமென்றும், நீங்கள் தான் நாளைய சமுதாயம், எதிலும் தெளிவாக இருக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறினார். காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்கள் தம் உரையில், புகையிலை பயன்படுத்துதல் தவறான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் மூளைச் சோர்வு, மனச்சோர்வு ஏற்படும் என்றார். நல்ல நண்பர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டுமென்றார். தாசில்தார் ராஜா அவர்கள் பேசும்போது பெற்றோர். உற்றார், உறவினர் மற்றும் சுற்றத்தார் ஆகியோர் புகை பிடித்தால் அன்பால் அவர்களைத் திருத்துங்கள் என்றார்.காவல் ஆய்வாளர் இராமசந்திரன் அவர்கள் தமதுரையில், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் ஒவ்வொருவரையும் சமூக விரோதியாக மாற்றுகிறது எனப் பொதுவான அறிவுரைகள் வழங்கினார். போக்குவரத்து ஆய்வாளர் பாஸ்கரன் அவர்கள் உரையில், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களே முக்கிய காரணம். அவர்கள் சொல்லுவதை தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள் என்றார். சுகாதார ஆய்வாளர் முத்துவேல் அவர்கள் பேசுகையில், தீய வழிகளில்செல்லக் கூடாது. போதைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பெற்றோர்கள் சொல் பேச்சைக் கேட்க வேண்டுமென்றும் கூறினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி