மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், இன்னும் 5 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பவர் பட்டதாரி இளைஞர். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. பிரசன்ன வெங்கடேஷ், தான் காதலித்து வந்த காதலியுடன் வரும் 28ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் வழங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, டிஇஎல்சி பள்ளி அருகே, எதிரே வந்த வேன் நேருக்கு நேர் மோதியதில் அவர் கடுமையாக காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடைபெற இன்னும் சில தினங்களே இருந்த நிலையில் ஏற்பட்ட இந்த விபத்து, உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















