தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ’ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்” உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று (25.10.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. ஆறுமுகம், திரு. தீபு ஆகியோர் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.‘நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன், எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும்,
தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குக் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.” என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
















