தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம் (13.10.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவலர் சிக்கன நாணய சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை, இனிப்பு மற்றும் நினைவு பரிசு வழங்கினார்.
இதில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் செயலாட்சியர் திரு. சாம் டேனியல் ராஜ் தலைமை தாங்கினார். பின்னர் இக்கூட்டத்தில் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 2024-2025ம் ஆண்டின் இறுதி தணிக்கை அறிக்கை வாசித்து பதிவு செய்தல், நிகர லாபம் பிரிவினை செய்தல், 2025 – 2026ம் ஆகிய ஆண்டுகளுக்கு உத்தேச வரவு செலவுத்திட்டம் அங்கீகாரம் செய்தல், சங்க சிறப்பு துணை விதி திருத்தம் ஏற்படுத்துதல், தலைவர் மற்றும் பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. ஆறுமுகம், திரு. தீபு உட்பட காவல்துறை அதிகாரிகள், காவல் அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலாளர் (பொறுப்பு) திரு. மாரிப்பாண்டி உட்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.