மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதாலும், அனுமதியின்றி வைக்கப்படும் ப்ளக்ஸ் பேனர்கள், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உள்ளிட்ட வற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்தனர். வெடி வெடிக்க தடை உத்தரவு இருந்தும் தொடரும் இந்த பாதிப்புகளாலும், அடுத்தடுத்து எழுந்த தொடர் புகார்களின் அடிப்படையில் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில், உசிலம்பட்டி சரக காவல்துறை சார்பில், வருவாய்த் துறை, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தலைமையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள மண்டப உரிமையாளர்கள், ப்ளக்ஸ் பிரிண்டிங் கடை உரிமையாளர்கள், ப்ளக்ஸ் கட்டுவோர்கள், ரேடியோ மைக்செட் உரிமையாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில், பேசிய உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன், உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிக்க தடை இருந்தும் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், வேறு எந்த ஊரிலும் இது போன்று இடையூறு செய்வதில்லை பாதிக்கப்படுவது உங்கள் உறவினர்கள் தான் எனவும், போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி பட்டாசு வெடித்தாலோ, அனுமதியின்றி ப்ளக்ஸ் பேனர் வைத்தாலோ, பொது இடங்களில் ஒலிபெருக்கி அமைத்தாலோ கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், மண்டப உரிமையாளர்கள் இல்ல விழாவிற்காக பதிவு செய்ய வரும் போதே பட்டாசு வெடிக்க , ப்ளக்ஸ் பேனர் வைக்க அனுமதி இல்லை என்ற விதிமுறைகளை தெரிவிக்க வேண்டும் எனவும், மீறுவோர் மீது எந்த பாரபட்சமும் காட்டாமல் காவல்துறை வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்து பேசினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி