மராட்டிய மாநிலம்: தானே மாவட்டம் ராபோடி ருத்து பார்க் பகுதியை சேர்ந்தவர் சீமா பாட்டீல்(வயது42). இவரது மாமனார் காசிநாத்(76). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 15-ந் தேதி காலை 11.30 மணி அளவில் சீமா பாட்டீல் மாமனாருக்கு தேநீர் கொடுத்து உள்ளார். ஆனால் காலை உணவு கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காசிநாத் வாக்குவாதம் செய்தார். மேலும் உரிமம் கொண்ட துப்பாக்கியை எடுத்து மருமகள் சீமா பாட்டீலை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் வயிற்றில் குண்டு பாய்ந்து சீமா பாட்டீல் படுகாயமடைந்தார். உடனே காசிநாத் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
படுகாயமடைந்த சீமா பாட்டீல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து காசிநாத்தை தேடிவந்தனர். இதற்கிடையில் தப்பி சென்ற காசிநாத் நேற்று முன்தினம் போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளை கொலை செய்த காசிநாத் போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க ஆட்டோ, பஸ்களில் ஏறி சென்று தலை மறைவானதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது.


















