திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம்,முக்கூடலில் உள்ள துணிக் கடை, இறைச்சிக் கடை, மருந்துக் கடைகளில் 4 பேர் சென்று தங்களுக்கு தேவையான துணி, இறைச்சி, மருந்துகள் வாங்கிக் கொண்டு இணைய வழி பரிவர்த்தனையான போன் பே, ஜீ பே மூலம் பணம் அனுப்பியதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்கள். எனினும், கடை உரிமையாளர்களின் கணக்கில் பணம் வரவாகவில்லை என தெரிய வந்ததால் இது தொடர்பாக கடை உரிமையாளர்கள் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, முக்கூடல் காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில், திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியைச் சேர்ந்த சுப்பையா என்ற சுபாஷ் (22). இசக்கி பாண்டி (19). பாப்பாக்குடி பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (28). பாப்பாக்குடி தங்கம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (26). ஆகியோர் முக்கூடல் பகுதியிலுள்ள கடைகளில் பொருள்கள் வாங்கி விட்டு இணைய வழியில் பணம் செலுத்துவது போன்று அனுப்பாமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இசக்கிபாண்டி, கருப்பசாமி, செல்வகுமார் ஆகிய மூவரையும் கைது செய்து தலைமறைவாக உள்ள சுப்பையா என்ற சுபாஷை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்