சென்னை: சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மேற்படி குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 09.04.2022 அன்று கோயம்பேடு, சின்மயா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டு, மேற்படி பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 1) இளவரசன் (வ/28)
சேலம் மாவட்டம் 2) பரத்குமார் (வ/37) வில்லிவாக்கம் 3) ராஜ்குமார் (வ/30) இராமநாதபுரம் மாவட்டம் 4) அம்பரீஷ் (வ/24) நங்கநல்லூர் 5) சூரஜ் (வ/27) கோயம்பேடு 6) திருப்பதி (வ/28) வில்லிவாக்கம், சென்னை 7) சீனிவாசன் (வ/60) கடலுர் மாவட்டம் ஆகிய 7 நபர்களை கைது செய்தனர். மேலும் மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 5 பெண்கள் மீட்கப்பட்டனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.















