சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவற்றை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். சோழிங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி சிறப்பு காவல்படை 2ம் அணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவற்றை முதலமைச்சர் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில், தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, காவல்துறை டிஜிபி திரு.சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால்,IPS உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையராக ஏடிஜிபி ரவி,IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதியன்று சட்டப்பேரவையில்,காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரையில், “மாறி வரும் குற்றங்கள். மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறையை மற்ற பெருநகரங்களில் உள்ளதுபோல் சீரமைத்திட இந்த அரசு எண்ணியுள்ளது. அந்த அடிப்படையில், தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு தனித் தனி புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும்” என்று அறிவித்து இருந்தார்.
தாம்பரம் காவல் ஆணையரகம், தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 20 காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்படும். நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் மற்றும் மணிமங்கலம் காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் தாழம்பூர் மற்றும் கேளம்பாக்கம் காவல் நிலையங்கள் தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி மற்றும் செங்குன்றம் ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 25 காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்படும். நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெள்ளவேடு. செவ்வாப்பேட்டை, சோழவரம், மீஞ்சூர் மற்றும் காட்டூர் காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் புதிதாக அமைக்கப்படுவதன் மூலம் சென்னை புறநகர்ப் பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்கும், போக்குவரத்தினை சீர்படுத்துவதற்கும், சட்டம் ஒழுங்கு தொடர்பான மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் வழிவகை ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.