கோவை : கோவை மாநகரம் காலை 0900 மணிக்கு, போத்தனூர் காவல்நிலையத்தில் அபுதாகீர் த.பெ.பாவா, என்பவர் தனது மகன் முகமது சபீர் மற்றும் திருமறை நகரை சேர்ந்த அப்துல் கலாம் அசாத் என்பவர் மகன் அப்சல் ஆகியோர் காணவில்லை என கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தநிலையில் நேற்று 01.01.21-ந்தேதி திருச்சி மாநகரம் பாலக்கரை காவல் சரகத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றிதிரிந்த இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரித்தபோது தாங்கள் இருவரும் கோயம்புத்தூர் போத்தனூர் பகுதியை சார்ந்தவர்கள் என்றும், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருவதாகவும், வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வந்து விட்டதாகவும், வரும்போது பணம் மற்றும் நகைகளை எடுத்து வந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கோவை ரயில் நிலையம் வந்தபோது தங்களுக்கு திருச்சியை சேர்ந்த சூர்யா என்பவர் அறிமுகம் ஆகி அவருடன் அதிகாலை திருச்சிக்கு வந்ததாகவும், பின்னர் தங்கள் இருவரையும் ஒரு ஆட்டோவில் அழைத்துக் சென்று தங்களை அடித்தும், கத்தியை காண்பித்து மிரட்டியும் முகமது சபீர் வைத்திருந்த பணம் மற்றும் நகைகளையும் பறித்து கொண்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கோவை மாநகரம் போத்தனூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்த நிலையில். திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் நேரடி உத்தரவின்பேரில் காவல் உதவி ஆணையர், காந்தி மார்க்கெட் சரகம், காவல் ஆய்வாளர் பாலக்கரை காவல்நிலையம் மற்றும் தனிப்படை போலீசார் துரிதமாக விசாரணை செய்ததில், திருச்சி பாலக்கரையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது நண்பர்கள் பிரசாத், அசோக்குமார், வின்சென்ட்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து மேற்படி சிறுவர்களை அடித்தும் கத்தியை காண்பித்து பணம் மற்றும் நகைகளை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் மேற்படி எதிரிகள் சிறுவர்களிடமிருந்து பறித்து சென்ற பணம் ரூ.13,16,000/- மற்றும் 9 சவரன் தங்க நகைகளை மீட்டும், இது தொடர்பாக போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் சொல்லியும், போத்தனூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் வசம் வழக்கில் காணாமல் போன சிறுவர்களை ஒப்படைத்தும், எதிரிகள் மற்றும் எதிரிகளிடமிருந்து மீட்கப்பட்ட பணம் ரூ.13,16,000/- மற்றும் 9 சவரன் தங்க நகைகளை திருச்சி மாநகர காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
மேற்படி சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரிகளை கைது செய்து சிறுவர்களிடமிருந்து பறித்து சென்ற பணம் மற்றும் நகைகளை மீட்ட காவல் உதவி ஆணையர் காந்திமார்க்கெட் சரகம் மற்றும் காவல் ஆய்வாளர் பாலக்கரை காவல்நிலையம் மற்றும் தனிப்படை காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.