சென்னை: சென்னை மாநகர 107வது புதிய காவல் ஆணையராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.மகேஷ்குமார் அகர்வால்,IPS. அவரிடம் முன்னாள் காவல் ஆணையர் திரு.ஏகே விஸ்வநாதன், IPS முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்து கொண்டு விடைபெற்றார்.
இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் மகேஷ்குமார் அகர்வால். அப்போது அவர் கூறியதாவது:
-
சென்னை மாநகர காவல் ஆணையராக என்னை நியமித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
-
சென்னை பொது மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.
-
சென்னை காவல் துறையில் சுமார் 20 ஆயிரம் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறேன்.
-
பொதுமக்கள் தங்கள் குறைகளை காணொலி அலைபேசி மூலமாக என்னிடம் சொல்வதற்கு ஏற்பாடு செய்ய உள்ளேன். தற்போது பொதுமக்கள் ஆணையர் அலுவலகம் வருவதற்கு கஷ்டமாக இருக்கும். எனவே, தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, வீடியோ கால் மூலமாக பொதுமக்கள் என்னிடம் அவர்கள் குறைகளை சொல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
-
அதேபோன்று போலீசார் நலனை உறுதி செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை செய்வோம்.
-
மக்கள் ஒத்துழைப்பு தேவை, கொரோனா தடுப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு உத்தரவுப்படி, அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் அத்தியாவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
-
பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினர் சென்னை காவல் துறைக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.