நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் விதி மீறல்களில் ஈடுபட்ட குற்றத்தின் கீழ்நாகை மாவட்டத்தில் இதுவரை 1,988 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 1415 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 24 தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகின்றது. மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நாகை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 90க்கும் மேற்பட்ட இடங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்தின் கீழ் நாகை மாவட்டத்தில்இதுவரை ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1393 இருசக்கர வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,415 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1,900க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தேவையின்றி வெளியில் அடிக்கடி வர வேண்டாம் என்றும் மீறி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.