சென்னை : வடக்கு கடற்கரை பகுதியில் தனியார் பணபரிமாற்றம் (Money Exchange) நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி செய்த வழக்கில் 11 குற்றவாளிகள் கைது செய்து ரூ. 12,90,000/-பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, எம்.கே.பி.நகர், முகமது அபுபக்கர் சித்திக், வ/34 த/பெ.அப்துல்காதர் என்பவர் தனியார் பணபரிமாற்றம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 12.12.2019 அன்று, நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.17,91,000/-ஐ உரிமையாளர் திரு.அனிஸ் வீட்டில் ஓப்படைப்பதற்காக, சகஊழியர் திரு.அப்துல்காபர் என்பவருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் 2வது வடக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, 5 இருசக்கர வாகனங்களில் அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர்கள் வழிமறித்து மிரட்டிஅவர்களிடமிருந்து மேற்படி பணம் ரூ.17,91,000/-ஐ பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து முகமது அபுபக்கர் சித்திக் B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த பல சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்தும் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மேற்படி நிறுவனத்தில் வேலை செய்து வரும் 1.தமிமுன் அன்சாரி 2.ரமேஷ் 3.வடிவேல், 4.மேகநாதன் 5.பார்த்திபன் 6. கிரிதரன் 7.சுரேஷ், 8.வாசுதேவன், 9.வசந்தகுமார், மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இளங்சிறார்கள் 2 பேர் ஆகிய 11 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.12,90,000/- மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ரமேஷ் என்பவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.G.அம்பேத்கார், தலைமைக்காவலர்கள் திரு.V.பழனி (த.கா.17957), திரு.K.M.பாஸ்கர் (த.கா.29487), முதல்நிலைக்காவலர்கள் திரு.G.பரசுராமன் (மு.நி.கா.28893), திரு.வினோத்குமார் (மு.நி.கா.31479) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (30.12.2019) நேரில் அழைத்துப்பாராட்டி வெகுமதி வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை