மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பகுதியில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. இதை அடுத்து லாரி டிரைவர் லாரியை இடதுபுறமாக நிறுத்துவதற்காக பிரேக் போட்டுள்ளார். அப்போது லாரியின் பின்னால் பிராய்லர் கோழிகளை ஏற்றிச் சென்ற வேன் லாரியின் பின்னால் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனில் சென்ற கீழ உறப்பனூரைச் சேர்ந்த கவின் (வயது 27) மற்றும் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (28) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வேன் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இறந்துபோன இருவரின் உடல்களும் வேனுக்குள் சிக்கிக்கொண்டதால், மதுரை திருமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஒரு மணி நேரம் போராடி இறந்து போன இரண்டு பேரின் உடல்களையும் மீட்டனர்.இந்த விபத்து குறித்து, திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி