சிவகங்கை: காரைக்குடியில் அமைந்துள்ள செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியின் 15-ஆம் ஆண்டு தடகள மற்றும் விளையாட்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர் சு. செல்லப்பன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் செ. சத்தியன் அவர்கள் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக உயர்திரு. ஆஷிஷ் புனியா ஐ.பி.எஸ்., உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP), சிவகங்கை மாவட்டம், காரைக்குடி,
கௌரவ விருந்தினராக முன்னாள் தேசிய கபடி வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான உயர்திரு மனத்தி பி. கணேசன், சிறப்பு விருந்தினராக உயர்திரு சி. ரமேஷ் கண்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், சிவகங்கை, பி. வேலுமணி, பிராந்திய மூத்த மேலாளர், விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை,
பச்சேரி திரு சி.ஆர். சுந்தரராஜன், சேர்மன், கள்ளழகர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் இவ்விழாவில் பள்ளியின் கல்வி இயக்குநர் திருமதி ராஜேஸ்வரி, முதல்வர் திரு சங்கரசுப்ரமணியம், துணை முதல்வர் திருமதி சுபாஷினி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவின் துவக்கத்தில் பள்ளியின் முதல்வர் திரு சங்கரசுப்ரமணியம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக் கொண்டதுடன், விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.
மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் தங்களின் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். மழலையர் பிரிவில் தொடங்கி அனைத்து மாணவர்களும் நிகழ்த்திய விளையாட்டு பயிற்சி நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. மேலும் தற்காப்பு கலைகள், சிலம்பம், பிரமிடு, ரோலர் ஸ்கேட்டிங் போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்களின் அசாதாரண திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.
கௌரவ விருந்தினர் மனத்தி பி. கணேசன் அவர்கள் உரையாற்றும்போது,
“இந்தப் பள்ளியின் கட்டமைப்பும், இங்குள்ள விளையாட்டு மைதானமும் என்னை பெருமைப்பட வைத்தது. இது என்னை என் பள்ளிப் பருவத்திற்கே அழைத்துச் சென்றது. சரியான விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, சரியான முறையில் பயிற்சி பெற்றால் சிறந்த மனிதனாகவும், சிறந்த வெற்றியாளராகவும் உருவாக முடியும்” எனக் கூறினார். மேலும், தன்னுடைய பள்ளிப் பருவத்தில் பெற்றோரும் உடன்பிறந்தோரும் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்ததாலேயே இந்நிலைக்கு வந்ததாகவும், தனது திறமையை கண்டறிந்த விளையாட்டு ஆசிரியர் தங்கராஜ் அவர்களை நினைவு கூர்ந்தார்.
சிறப்பு விருந்தினர் சி. ரமேஷ் கண்ணன் அவர்கள் உரையாற்றும்போது,
“மாணவர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. பள்ளி அளவிலேயே நிறுத்தாமல், மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும். இங்கு உள்ள விளையாட்டு மைதானமும், இந்த விழாவிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களும் விழாவின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது” எனக் கூறி மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றன. விழா நிறைவாக துணை முதல்வர் திருமதி சுபாஷினி அவர்கள் நன்றியுரை கூறினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















