மதுரை, ஜூன் 5:
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய சுங்க கட்டண தடை உத்தரவைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள எலியார்பத்தி டோல்கேட்டில் நேற்று நள்ளிரவு முதல் சுங்க கட்டண வசூல் நிறுத்தப்பட்டது.
மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாலை பராமரிப்பு மற்றும் பிற உள்கட்டமைப்பு பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், அந்த பாதையில் பயணிக்கும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிப்பதை நீதிமன்றம் தடை செய்தது.
இத்தகவல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் வெளியாகியது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, எலியார்பத்தி முதல் தூத்துக்குடி பாண்டியாபுரம் டோல்கேட் வரை சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்தது.
இதனிடையே, எலியார்பத்தி டோல் நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை மீறி கட்டணம் வசூலித்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக விவாதங்கள் ஏற்பட்டன.
இவ்வெதிர்ப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவு நகல் டோல் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு கட்டணமின்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
டோல் நிர்வாகம், இதற்கு முன் “நீதிமன்ற உத்தரவு நகல் பெறப்படாததால் வசூல் தொடரும்” என அறிவித்தும், தற்போது நீதிமன்ற உத்தரவை ஏற்று வசூலை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி