மதுரை: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகர் 3 வது பஸ் ஸ்டாப் அருகில் மதுரை திருமங்கலம் சாலையின் நடுவே தரைப்பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது.
இந்த பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது மேலும் இந்த பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் இந்த இடத்தில் வாகனங்கள் அனைத்தும் ஒரு வழிப்பாதையில் செல்லுமாறு மாற்றி விடப்பட்டுள்ளது. முக்கியமான சந்திப்பாக உள்ள இந்த இடத்தில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசலாக காணப்படும். இந்த நிலையில் பாலம் கட்டும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்வதற்காக தடுப்புகள், ஒளிரும் எச்சரிக்கை பலகை ஆகியவற்றை முறையாக அமைக்காததாலும், போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போதிய போக்குவரத்து போலீசார் இல்லாத காரணத்தினாலும் இவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும் இந்த இடத்தில் மின் விளக்குகள் இல்லாததாலும் இரவு நேரங்களில் டூவிலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் சாலை தடுப்புகளில் மோதி விபத்தில் சிக்குகின்றனர். இந்த இடத்தில் விபத்தில் சிக்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிர்பலி ஏற்பட்ட சம்பவமும் நடைபெற்றது. இது குறித்து இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே உடனடியாக பாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்துவதுடன் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போக்குவரத்து போலீசாரை நியமித்து முறையான அறிவிப்பு பலகை மற்றும் தடுப்புகளை ஏற்படுத்தி விபத்துக்களை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி