கோவை: பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சாமி கோவில் அருகே அசோக் நகர் பகுதியில் புலித்தோலை சிலர் விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. தமிழ்நாடு வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் அன்வர்தீன் உத்தரவின்பேரில் துணை இயக்குனர் மேற்பார்வையில் கள பணியாளர்கள் அசோக் நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களின் வாகனத்தை சோதனை செய்த போது காரின் டிக்கியில் புலித்தோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 5 பேரையும் அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சேத்துமடை சேர்ந்த மயில்சாமி என்பவர் அதே பகுதியில் உள்ள பிரசாத் கவுண்டர் என்பவரது வீட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்து வந்தாராம், அப்போது அவரது வீட்டில் இருந்த புலி தோலை அவர்களுக்கு தெரியாமல் திருடி தன் வீட்டில் பதுக்கிவைத்திருந்தாராம். தற்போது தன் இரு மகன்கள் உதயகுமார் ரமேஷ் குமார் இவர்களது கூட்டாளிகள் பிரவீன் ஒடையகுளம் மணிகண்டன் சபரி சங்கர் ஆகியோர் மூலம் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புலித்தோலை விற்க முயன்ற ஆனைமலை பிரவீன் சேத்துமடை உதயகுமார், ரமேஷ்குமார, ஒடையகுளம் மணிகண்டன், சபரி, சங்கர், சேத்துமடை மயில்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புலித்தோல் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்