தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. மகாராஜன் மற்றும் வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. மகாலிங்கம், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் திரு. செந்தில்குமார், திரு. திருமணிராஜன் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் நேசமணிநகர் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது,
அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனம் மற்றும் கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் முத்தையாபுரம், முள்ளக்காடு, கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த கோமதிவேல் மகன் கணேசன் (56), கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்களான கிருஷ்ணப்பா மகன் மகேஷ் (28), பிலிங்கா மகன் அருண்குமார் (23), கோபி நாயக் மகன் சதீஷ் நாயக் (23) மற்றும் ஆனந்த் நாயக் மகன் சஷாங்க் நாயக் (20), ஆகிய 5 பேரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக இருசக்கர வாகனம் மற்றும் கண்டெய்னர் லாரியில் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படை போலீசார் குற்றவாளிகளான கணேசன், மகேஷ் அருண்குமார், சதீஷ் நாயக் மற்றும் சஷாங்க் நாயக் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 1,04,280/- மதிப்பிலான 134 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரொக்க பணம் ரூபாய் ஒரு லட்சம், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.