சென்னை : கொரோனாவுக்கு எதிரான போரில் பிற அரசு துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உறுதுணையுடன் தமிழக காவல்துறை களத்தில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகரத்தில், சென்னை பெருநகர காவல்துறையினர் கட்டுப்பாட்டு பகுதி மேலாண்மை, தனிமைப்படுத்துதல் மேலாண்மை, தொடர்புத் தடமறிதல், சமூக இடைவெளி விதிமுறைகளை அமல்படுத்துதல் மற்றும் சந்தை இடங்களில் கூட்டமாக மக்கள் கூடுவதைக் ஒழுங்குபடுத்துதல் போன்ற கடமைகளைச் செவ்வனே செய்து வருகிறார்கள். இக்கடமைகளை நிறைவேற்றும்போது ஏராளமான பொதுமக்களுடன் தொடர்பு கொள்கின்ற ஒரு நிலையும் உள்ளது .
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையிலும், 1920 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். 1549 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினார்கள் இத்தொற்று நோயிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமாகி மீண்டும் கடமையாற்றும் வகையில் பணிக்குச் சேர்ந்துள்ளனர்.மேற்குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிகளும் ஆளினர்களும் தங்கள் கடமைகளை முன்பிருந்த அதே அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் செய்து வருகிறார்கள்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க உதவும் வகையில் பிளாஸ்மாவை சேகரிக்க தமிழக அரசு பிளாஸ்மா வங்கி ஒன்றை நிறுவியுள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா வழங்க முன்வருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அவ்வேண்டுகோளுக்கிணங்க கொரோனாவிலிருந்து குணமடைந்த 48 காவல்துறைப் பணியாளர்கள் தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்தனர் .
மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், 38 காவல் துறைப் பணியாளர்கள் இன்று (13.08.2020) பிளாஸ்மா தானம் செய்ய தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டனர் . சென்னை பெருநகர காவல் துறையின் ஆயுதப் படையைச் சேர்ந்த 38 காவல் துறையினர் உள்ளிட்ட 40 காவல் பணியாளர்கள் ( 2 பெண் காவல் துறையினர் உட்பட ) மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் , திரு மகேஷ் குமார் அகர்வால் ,இ.கா.ப., காவல் ஆணையாளர் , சென்னை பெருநகர காவல் மற்றும் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் , ,இ.ஆ.ப , ஆகியோர் முன்னிலையில் பிளாஸ்மா தானம் செய்தனர் .
கொரோனாவுக்கு எதிரான போர்க்களத்தின் முன்னணியில் கடமையைச் செவ்வனே செய்து வரும் நிலையில் , கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்கும் பொருட்டு பிளாஸ்மா வழங்க தாங்களாகவே முன்வந்த காவல் துறையினரின் மனப்பாங்கினை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பாராட்டியுள்ளார் .