சென்னை: அம்பத்தூரில் பிரபல ரவுடியை கத்தியால் குத்தி கொன்று, சடலத்தில் கல்லை கட்டி குளத்தில் வீசிவிட்டு சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் அடுத்த மங்களபுரம் குள்ளன் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (29), பிரபல ரவுடி. கடந்த 10ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சதீஷின் தாய் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ரவுடி சதீஷ், கடந்த 10ம் தேதி இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை ஐடிஐ பின்புறம் மது அருந்தியது தெரியவந்தது.
அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, ரத்தக்கறை இருந்துள்ளது. இதனால், அங்கு நண்பர்களிடையே நடந்த தகராறில் சதீஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். சடலத்தை குளத்தில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், நேற்று முன்தினம் மாலை அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் அந்த குளத்தில் இறங்கி சடலத்தை தேடினர். இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
பின்னர், நேற்று காலை மீண்டும் குளத்தில் இறங்கி தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர். அப்போது, அங்கு கல்லுடன் கட்டிப் போட்ட நிலையில், சதீஷ் சடலத்தை வீரர்கள் மீட்டனர்.போலீசார் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, சதீஷின் உடலில் பல இடங்களில் கத்தி குத்து காயங்கள் இருந்தன. மேலும், அவரது கழுத்து துணியால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சதீஷ் மது அருந்திய போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையால் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
