கோவை : கோவை அவினாசி ரோடு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஸ்ரீ வித்யா. இவர் கோவை காட்டூர் காவல் நிலையத்தில், புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது, எனது தந்தை ராமதாஸ் கோவை கிராஸ்கட் ரோட்டில் கற்பகம் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் எனது மூத்த சகோதரர் பாலமுருகன் நகை விற்பனையில் மோசடி செய்து உள்ளார். அவர் ஜி.எஸ்.டி.யில் கடந்த (19.9.2019) முதல் (14.8.2020) வரை 38.742 கிலோ தங்கம் விற்பனையானதாக பதிவு செய்து உள்ளார்.
ஆனால் நகைக்கடைக்கான கணக்கில் 31.739 கிலோ தங்க நகைகள் விற்பனையானதாக கணக்கு காண்பித்து உள்ளார். எனவே ரூ.3½ கோடி மதிப்பிலான தங்கத்தை அவர் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து பாலமுருகன் மீது காட்டூர் காவல் ஆய்வாளர் திருமதி.சாந்தி, மற்றும் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.