மதுரை, ஜூன் 5: வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ள வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கும் நோக்கில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டம் கோவிலுக்குச் சொந்தமான கந்தசஷ்டி மண்டபத்தில், திருமங்கலம் கோட்டாட்சியர் திருமதி ஷாலினி தலைமையில் நடைபெற்றது. இதில், கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன், கோவில் அதிகாரிகள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், மற்றும் பல நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வைகாசி விசாக தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால், அவர்களுக்கான குடிநீர், கழிப்பிடம், பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
- 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- தீயணைப்பு வாகனம் தயாராக நிறுத்தப்படும்.
- கிரிவலப் பாதை மற்றும் நான்கு ரத வீதிகளில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படும்; மாற்றுப்பாதை ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
- பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்தது.
இவ்வருடம் கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி