சென்னை : சென்னை பெருநகர காவல், பெசன்ட் நகர் காவல் மீட்பு குழுவினர் நேற்று (21.12.2021) பெசன்ட் நகர் கடற்கரையில் பணியில் இருந்தபோது, அங்கு பேசிக் கொண்டிருந்த நபர்களில் ஒருவர் திடீரென கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அங்கு பணியில் இருந்த பெசன்ட் நகர் காவல் மீட்பு குழு காவலர்கள் திரு.சபின் மற்றும் திரு.ராஜா ஆகிய இருவரும் உடனே கடலுக்குள் நீந்திச் சென்று தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற நபர் ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவரின் மகன் ரேலங்கி பணீந்திரகுமார் (வ/30) என்பதும், இவர் சென்னையில் வேலை செய்யும் பெண்ணை காதலித்து வந்ததும், காதலில் மனமுடைந்த ரேலங்கி பணீந்திரகுமார் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மேற்படி தற்கொலைக்கு முயன்ற நபரை கடலுக்குள் நீந்திச் சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
