சென்னை: அயனாவரத்தில் தண்ணீர் பிரச்னைக்கு, உரிய நடவடிக்கை எடுத்து, அடி குழாய் அமைத்து தந்த, அயனாவரம் பெண் உதவி ஆய்வாளரை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரத்தில், ஆனந்த விநாயகர் கோவில், இரண்டாவது தெரு உள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள், குடிநீருக்காக வீதிவீதியாக அலைந்தனர்.இதற்கு காரணம், அப்பகுதியில் உள்ள இரு பிரதான கட்சிகளின் முட்டுக்கட்டை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, அயனாவரம் போலீசாரிடம், மக்கள் புகார் அளித்தனர். வழக்கை விசாரித்த, அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, குடிநீர் வாரிய பொறியாளரிடம் பேச்சு நடத்தி, அப்பகுதியில், புதிதாக அடிக்குழாய் ஒன்றை, நேற்று முன்தினம் அமைத்து தந்தார்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக, அவருக்கு, பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர்.