கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபரை காரில் கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றது. இதில் பாதிக்கப்பட்டவர் உடல் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்குச் சென்றார். பிறகு மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவருடைய தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 5 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 25.01.2021ம் தேதி பெரியநாயக்கன்பாளையத்தில் வசித்து வரும் மதுரையைச் சேர்ந்த சுரேஷ், சுஜித் மற்றும் அவரது நண்பர்களுடன் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த நாய்சேகர் என்கிற மணிகண்டன் என்பவரை காரில் கடத்தி சென்று அடித்து உதைத்தனர்.
இது தொடர்பாக மணிகண்டன் என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 28.01.2021ம் தேதி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், உடல்வலியின் காரணமாக 30.01.2021ம் தேதி கோவை கங்கா மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 04.01.2021 அதிகாலை 04.35 இறந்துவிட்டதாக அவரது தந்தை கொடுத்த புகார் அளித்தார். மேட்டுப்பாளையம் காவல் நிலைய கு.எண். 116/2021 u/s 448, 364, 302 IPC இன் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, இ.கா.ப., அவர்களது உத்தரவுபடி மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் அவர்களது மேற்பார்வையில் காரமடை காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் அவர்களது தலைமையில் உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமை காவலர்கள் சரவணக்குமார், ஜெயபால், வர்கீஷ் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் எதிரிகள் சுரேஷ்குமார், ராஜகோபால், வடிவேல் மற்றும் ஸ்ரீ ஹரி ஆகியோர் 12.02.2021 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், துரித முயற்சியை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்த தனிப்படையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார். மீதமுள்ள தலைமறைவு குற்றவாளிகள் 5 பேரை தேடி வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்