கோவை : கோவை மாநகர் ராமநாதபுரம் காவல் நிலைய சரகம் அம்மன் குளம் ஹவுஸிங் யூனிட் அருகே வைத்து கடந்த 16-1-2020 ஆம் தேதி கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறில் வினோத் குமார் என்பவரை அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார், கண்ணன், ஜப்பான் என்கிற ஹரிகரன் மற்றும் சக்திவேல் ஆகியோர் கொலை செய்தனர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலைய வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கு கோவை மாநகர் சி2 பந்தய சாலை காவல் நிலைய சரகம் வாஉசி மைதானம் அருகில் உள்ள கோவை மாவட்ட குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று 27-8-2021 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜரான விஜயகுமார் மற்றும் ஜப்பான் என்கிற ஹரிகரன் ஆகியோர் விசாரணை முடித்து கோர்ட்டுக்கு வெளியே வந்தபோது மேற்படி ராமநாதபுரம் காவல் நிலைய வழக்கில் இறந்துபோன வினோத் குமார் என்பவரின் தந்தை கருப்புசாமி அண்ணன் பிரவீன் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என 10 பேர் அடங்கிய குழு அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொலை செய்ய முயன்றனர்.
அதில் மேற்கண்ட இருவரும் தலை முதுகு கை ஆகிய பகுதிகளில் ரத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேற்படி தாக்குதல் தொடர்பாக பந்தய சாலை காவல் நிலைய சரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை மாநகர மத்திய சரக காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் அர்ஜுன் குமார், விக்னேஷ் மற்றும் காவலர்கள் ஞானவேல், மாதேஸ்வரன், சுகந்த ராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட கருப்புச்சாமி, பிரவீன், சங்கர், அஜய், காமேஷ், பார்த்திபன், சதீஷ், சங்கர் கப்பீஸ் குமார், ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து சம்பவத்திற்கு பயன்படுத்திய அருவாள் கத்தி மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
