திருவள்ளூர் : இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள், போலீசார் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, இந்திய கடற்கரை முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் ஆண்டுதோறும் கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. கடலோரக் காவல் படையினரே தீவிரவாதிகள் போல் வேடமணிந்தும், டம்மி குண்டுகளை கொண்டு வருவதும் அவர்களை சக கடலோரக் காவல்படை வீரர்கள் கண்டுபிடிக்கும் வகையிலும் ஒத்திகைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாடு காவல்துறை, கடலோர காவல்படை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடற்கரை கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பழவேற்காடு அருகே கோரைக்குப்பம் மீனவ கிராமம் அருகே படகு மூலம் கடல் வழியே காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்திற்குள் தீவிரவாதிகள் போர்வையில் ஊடுருவ முயன்ற 9பேரை கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல காட்டூரில் காவல்துறையினர் சோதனையில் சாலை வழியே இருசக்கர வாகனத்தில் தீவிரவாதிகள் போர்வையில் ஊடுருவ முயன்ற 2பேர் பிடிபட்டனர். இருவேறு இடங்களில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் தீவிரவாதிகள் போர்வையில் வந்த 11பேர் சிக்கினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு