செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், துவங்கி வைத்தார்.
இப்பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மதுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி பேரணியாக நடந்து சென்றனர். மேலும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கோஷங்களை எழுப்பியவாறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் போதை மற்றும் மதுவால் ஏற்படும் தீமையில் குறித்து துண்டு பிரசுரங்கள் அவ்வழியாக வரும் வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
வெண்பாக்கம் பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணியில் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுடன் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்பேரணி செங்கல்பட்டு திண்டிவனம் சாலை வழியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்த பேரணிக்கான ஏற்பாட்டினை பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய துறைகள் இணைந்து மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், மலையடி வெண்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு கொழுக்கட்டையினை ஆய்வு செய்து, பின்னர் அங்கிருந்த குழந்தைகளுக்கு கொழுக்கட்டை மற்றும் சாக்லெட் வழங்கினார்.
மேலும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், சுமார் 350 மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நட்டு வைத்து மாணவ, மாணவிகளை மரக்கன்றுகளை நட்டு வளர்த்திட ஊக்கப்படுத்தினார். இதில் வித்யாசாகர் பெண்கள் கல்லூரி, அலிசன் காசி மேல்நிலைப் பள்ளி, ஹில்டா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் 250 மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, உதவி ஆணையர் (கலால்) இரா.இராஜன் பாபு, மாவட்ட கல்வி அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் உதயகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்