மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் காம்பவுண்டு சுவர் அருகில் செடி கொடிகள் அடர்ந்த புதருக்குள் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கத்தி குத்து காயங்களுடன் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர், வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.ஆனந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.முத்துக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.
அப்போது, அருகில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் செல்போன் ஒன்று கிடந்தது அதை எடுத்து போலீசார் சார்ஜ் செய்து பார்த்தபோது, வாலிபர் ஒருவரின் புகைப்படம் தெரிந்தது. விசாரணையில், மதுரை தெற்கு வாசலை சேர்ந்த மணிகண்டன் மகன் சங்கர் என்ற சங்கர்ராஜா 23. என்பது தெரிந்தது.
இவர் டிப்ளமோ மெக்கானிக் படித்தவர். அதற்குரிய வேலை கிடைக்காததால், வாடிப்பட்டியில் உள்ள தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக கடந்த ஆறு மாதமாக வேலை செய்து வந்தார் என்றும், இந்நிலையில் கடந்த 3 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு
ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இருந்து சென்றவர் மீண்டும் நேற்று வரை திரும்பி வரவில்லை. அதனால் அவரது பெற்றோரும் ஆம்புலன்ஸ் உரிமையாளரும் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்தது சங்கர் என்று தெரிய வந்தது.
அவரை யார் கொலை செய்தார். எதற்காக கொலை நடந்தது. கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் புலன் விசாரணை செய்து வருகிறார்கள். தடய அறிவியல் நிபுணர்கள் அந்த பகுதியில் உள்ள கைரேகைகளை பரிசோதனை செய்தனர்.
மக்கள் அதிகம் கூடும் இடமான தாலுகா அலுவலகம் பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி