அரியலூர் : அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் காவல் எல்லைக்குட்பட்ட சுண்டக்குடி கிராமத்தில் வசிக்கும் 18 வயது மாணவி ஒருவர் தனது தாயார் திட்டியதால் மனமுடைந்து கடந்த 30.10.2020 அன்று நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளர். அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் 379 திரு.மணிகண்டன் என்பவர், இரவில் தனிமையில் சென்ற மாணவியை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது அம்மாணவி தனக்கும் தனது தாயாருக்கும் சண்டை எனவும் அதனால் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. எனவே வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளார். இதனை அறிந்த தலைமை காவலர் உடனடியாக மேற்படி மாணவியை பெண் காவலர்களின் மூலம் காவல் நிலையம் அழைத்துச் வந்தார். அச்சமயம் காவல் நிலையத்தை ஆய்வு செய்ய சென்ற அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மதன் அவர்கள் மேற்படி மாணவியின் நிலைமை அறிந்து, மாணவியின் பெற்றோர்களை வரவழைத்து, அம்மாணவியிடம் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.Z.ஆனி விஜயா. இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கேடயம் திட்டத்தின் நன்மைகள் குறித்தும், பெண் குழந்தைகள் சமுதாயத்தில் உயர்நிலையை அடைய திருச்சி சரக காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மாணவிக்கு விரிவாக எடுத்துக் கூறி, தக்க ஆலோசனைகள் வழங்கினார். அச்சமயம் மேற்படி மாணவி தான் காவல்துறை துணைத்தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா. இ.கா.ப அவர்கள் போன்று காவல் அதிகாரி ஆகி மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய விரும்புவதாக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி மாணவி காவல்துறையில் சேர்வதற்கு தேவையான புத்தகங்களை தனது சொந்த செலவில் வாங்கி மாணவிக்கு அளித்து, வருங்காலத்தில் காவல்துறையில் இணைந்து சட்டத்தின் படியும், மக்கள் போற்றும்படியும் நேர்மையாக, சிறப்பாக மக்கள் சேவை செய்ய வேண்டும் என வாழ்த்தி மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.