சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபால். கடந்த 3 ஆம் தேதி மாலை தனது இரண்டு வயது மகன் அபினேஷ் ராவ் மற்றும் மனைவி சுமித்ராவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை பாரதி நகர் மேம்பாலத்தின் மேல் பைக்கில் செல்லும் போது காற்றில் பறந்து வந்த காற்றாடி மாஞ்சா நூல் சுமித்ராவுடன் அமர்ந்து வந்த அபினேஷ் ராவ் கழுத்தில் சிக்கி அறுத்தது. கண்ணாடிகள், வஜ்ரம் போன்ற பொருட்களை வைத்து தயாரிக்கப்படுவதே மாஞ்சா நூல். ஆன்லைனில் மாஞ்சா என்ற பெயரை பயன்படுத்தி நூல்கள் விற்கப்படுகிறது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அபினேஷ் ராவ் சிறிது நேரத்தில் உயிரிழந்தான். இச் சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக, காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கை குறித்து பெருநகர காவல்துறை (வடக்கு) கூடுதல் ஆணையார் R.தினகரன் திங்கள்கிழமை அளித்த பேட்டியில்,
சென்னை காவல் துறையால் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் யாரேனும் விற்பனை செய்தாலும், மாஞ்சா நூலில் பட்டம் விட்டாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆன்லைனில் சட்ட விரோதமாக மாஞ்சா நூல் விற்கப்படுகிறது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும். சென்னை முழுவதும் மாஞ்சா நூல் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்த 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த தனிப்படைகள் சட்டவிரோதமாக மாஞ்சா நூல் யாரேனும் தயார் செய்கிறார்களா, விற்பனை செய்கிறார்களா என சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 50 பட்டம், 5 மாஞ்சா நூல் உருண்டை பறிமுதல் சென்னையில் போலீசாரின் தடையை மீறி வண்ணாரப்பேட்டை மணிகண்டன் முதலி தெரு, தண்டையார் பேட்டை இளைய முதலி தெரு, வ.உ.சி. நகர், காசிமேடு, ராயபுரம், கொருக்குபேட்டை பாரதி நகர், திருவொற்றியூர் என வடசென்னையில் மாஞ்சா நூல் விற்பனைக்கு பெயர் பெற்ற இடம். இந்த பகுதிகளில் எந்த நேரத்தில் மாஞ்சா நூல் கேட்டாலும் மறைமுகமாக கிடைக்கும். போலீசார் பல வகையில் தடுத்தாலும் மாஞ்சா நூல் விற்பனையை தடுக்க முடியவில்லை. இதற்கு காரணம் குடிசை தொழிலாக மாஞ்சா நூல் தயாரிக்கப்படுகிறது.
அந்த வகையில் நேற்று வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி, தண்டையார் பேட்டை இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், ராயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்டோர் கொண்ட 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள்நடத்திய அதிரடி சோதனையில், கடைகள் மற்றும் குடிசைகளில் ரகசியமாக விற்பனை செய்த 50 பட்டம் மற்றும் 5 மாஞ்சா நூல் உருண்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடையை மீறி விற்பனை செய்த நபர்கள் உதவியுடன் தனிப்படை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று வண்ணாரப்பேட்டையில் தடையை மீறி காற்றாடி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகுமார், சுரேஷ், பூபதி, குமார், ஞானசேகர் ஆகிய 5 பேரை வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாஞ்சா நூல் பயன்பாடு குறித்து தகவல் தெரிந்தால், உடனே போலீசாரிடம் தெரிவித்து விடுங்கள்.