சென்னை : சென்னை பெருநகர காவல்துறை சார்பாக இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் துணை ஆணையரின் கீழ் இயங்கும் 12 மாவட்டங்களான பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூர், அண்ணாநகர், புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கீழ்பாக்கம், அடையார், டி நகர், புனித தோமையார் மலை, மாவட்டங்களுக்கு உட்பட்ட எல்லையில், இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவசர தேவை இருப்பின் பொதுமக்கள் இந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 24 மணி நேர காவல்துறை சேவையான 100 என்ற எண்ணும் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.