சென்னை : தமிழக முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் ஒருவாரம் போதைப் பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சென்னை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.சங்கர் ஜிவால் (drive against drugs) என்கின்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
சென்னை பெருநகர காவல் வேப்பேரி காவல் நிலைய ஜி1 காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. வேலு அவர்கள் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்தும், பேருந்து படிக்கட்டு பயணம் ஆபத்து என்பது குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடத்தினார். இதன் ஒரு பகுதியாக வேப்பேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் வேணு கோபால் செட்டி மேல்நிலை பள்ளியில் உள்ள மாணவர்களை சந்தித்து அறிவுரை வழங்கினார். இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக, காவல் அதிகாரிகள் தலைமையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள், குடும்ப சீர் அழிவுகள் குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதி மொழியேற்றனர். போதைப் பொருள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை வேதிப்பொருள் உள்ளது. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான உணர்வு கிடைப்பதாக அதைப் பயன்படுத்துவோர் தெரிவிக்கின்றனர். போதைக்கு அடிமையாகிவிட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது, பிறரை துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம் மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இத்தகைய பழக்கங்களுக்கு ஆளானவர்களுக்கு நாளடைவில் மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும், கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து மூளையில் ஏற்படும் பாதிப்புகளால் தானாகவே பேசிக்கொள்வது, பயம், மனச்சோர்வு, மனக் குழப்பம் போன்ற பிரச்சினை உண்டாகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, முடிவெடுப்பதில் சிக்கல், சிந்தனைத்திறன் குறைவு, ஞாபகமறதி, தனக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று கற்பனை செய்துகொண்டு அதன்படி நடந்து கொள்வது போன்ற மனநல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மது உடலின் உள்ளே செல்லச் செல்ல நம் உடலிலுள்ள வைட்டமின்களை அது அழித்து விடுகிறது. மேலும் கல்லீரல், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகிறது.
தற்போது மது மற்றும் போதை பொருட்களில் உடல்நலனுக்கு பாதிப்பினை உண்டாக்குகிற, அப்பழக்கத்தைத் தூண்டுகிற வேதிப்பொருட்கள் அதிக அளவு கலப்பதால் பெரும்பாலானோர் போதை நோயாளிகளாக மாறுவதோடு மன நோயாளிகளாகவும் மாறுகின்றனர்.
போதை மற்றும் குடிப்பழக்கம் உடையவர்கள் செய்கிற குற்றச் செயல்களால் முதலில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சமூகத்தில் மரியாதை குறைவு, சமூகப் புறக்கணிப்பு மற்றும் பணப் பிரச்சினைகளும் உண்டாகிறது.
காவல் ஆய்வாளர் திரு. வேலு பேசுகையில், இந்திய தண்டனை சட்டம், வழக்கு பிரிவுகள், யாவருக்கும் பொதுவானது. மாணவர்கள் கல்வி பயிலும் வயதில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். சமூக விரோத செயலில் ஈடுபட்டாலோ, குற்றம் செய்பவருக்கு துணையாக இருந்தாலோ தண்டனை இருவருக்கும் உண்டு. எப்.ஐ.ஆர். எனப்படும் வழக்குபதிவு செய்து விட்டால், மாணவர்கள் உயர்கல்வி பயிலவோ, வெளிநாடு செல்லவோ, அரசு வேலை பெறவோ முடியாது.
காவல் ஆய்வாளர் திரு. வேலு அவர்கள், மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில், தெளிவாக விளக்கி கூறினார். மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, போதை பொருட்கள் தடுப்பு குறித்து அறிந்து கொண்டனர் . இன்றைய மாணவர்களே, நாளை இந்திய குடிமகன்களாக உலா வர உள்ளனர். இவர்களை சிறுவதில் இருக்கும் போதே விழிப்புணர்வு ஏற்படுத்துவதால், எதிர்கால குற்றங்கள் வெகுவாக தவிர்க்கப்படும். காவல் ஆய்வாளர் திரு.வேலு அவர்கள் பணி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. இந்நிகழ்ச்சியல் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர் காவல் ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.