தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூரங்குடி மேல்மாந்தை பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் முத்துராஜ் (35), என்பவரது வீட்டில் கடந்த (02.12.2022) அன்று மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கு பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து முத்துராஜ் (18.12.2022) அன்று அளித்த புகாரின் பேரில் சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்பேரில் சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. இளவரசு தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம், குளத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. கொடிவேல் மற்றும் சூரங்குடி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் திரு. பாலகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சூரங்குடி மேல்மாந்தை பகுதியை சேர்ந்த கண்ணுசாமி மகன் தங்க முனியசாமி (34) என்பவர் மேற்படி முத்துராஜின் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளி தங்க முனியசாமியை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட சுமார் ரூபாய் 1,92,000/- மதிப்புள்ள 6 ½ பவுன் தங்க நகைகளை மீட்டனர். மேலும் இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி தங்க முனியசாமி மீது ஏற்கனவே சூரங்குடி காவல் நிலையத்தில் திருட்டு உட்பட 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.