கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் ,சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் சாமுண்டி மகன் மகேந்திரன். இவர் சங்கராபுரம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் நெல் மற்றும் எள் மூட்டைகளை வாங்கி, அதை தஞ்சாவூர் மாவட்டம் புனவாசல் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் ஆனந்த் என்பவரிடம் விற்பனை செய்து வந்தார். அந்த வகையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த சுமார் 8 ஆயிரம் மூட்டை விவசாய பொருட்களை ரூ. 62 லட்சத்து 64 ஆயிரத்து 628-க்கு ஆனந்திடம் விற்பனை செய்தார். ஆனால், அந்த பணத்தை மகேந்திரனிடம் அவர் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து மகேந்திரன் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனிடம், புகார் மனு அளித்தார். மனுவை பெற்ற அவர், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியனுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து, ஆனந்தை வலைவீசி தேடி வந்தனர். கைது இந்த நிலையில், சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்திற்கு நெல் கொள்முதல் செய்ய வந்த ஆனந்தை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். ஆனந்த் மீது அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளிடம் மோசடி செய்த வழக்கு ஒன்றும் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.