கள்ளக்குறிச்சி : சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜேம்ஸ்பிலிப் (48 ) த/பெ பிலிப் அந்தோனி என்பவர் சங்கராபுரம் காவல் நிலையம் வந்து சங்கராபுரம் பகுதியில் உள்ள வில்லேஜ் பஜார் உரிமையாளர் மற்றும் தங்கள் நிறுவனத்தின் முகவராக இருந்த பிரியங்கா(31) க/பெ விஜயகுமார் என்பவர் நிறுவனத்தின் 1,15,55,500/- ரூபாய் பணத்தை கையாடல் செய்து விட்டு அது தொடர்பாக கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகார் மனுவை பெற்று சங்கராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் பண கையாடல் தொடர்பான வழக்கினை விசாரணை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாலசுப்பரமணியன் அவர்களுக்கு உத்தரவிட்டார். வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம் விசாரணை செய்ததில் கடந்த 2020-ஆண்டு சங்கராபுரம் வில்லேஜ் பஜார் என்ற இடத்தில் ஏடிம் மற்றும் பணம் டெபாசிட் இயந்திரம் பொருத்தப்பட்டது.
வில்லேஜ் பஜார் உரிமையாளர் மற்றும் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் முகவராக இருந்த பிரியங்காவிற்கு நிறுவனம் அனுப்பும் குறுஞ்செய்தி மூலமாகவும் இரகசிய குறியீடு வாயிலாகவும் சங்கராபுரம் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து பணத்தை பெற்று இயந்திரத்தில் செலுத்த வேண்டிய அவர் இயந்திரத்தில் செலுத்தாமல் தன்னுடைய சொந்த வங்கி கணக்கான கனரா வங்கி கணக்கிற்கு 1,15,55,500 /- ரூபாய் பணத்தை கூட்டு சதியின் மூலம் கையாடல் செய்தும் கையாடல் செய்த பணத்தை செலுத்த சொன்ன நிறுவனத்தின் துணைத்தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது விசாரனையில் தெரியவருகிறது. எனவே குற்றவாளி பிரியங்காவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கில் மீதமுள்ள தலைமறைவாகியுள்ள குற்றவாளியை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக பண மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.