தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், குற்ற செயல்கள் நடவாமல் தடுக்கவும் கூடுதலாக 21 இருசக்கர வாகன ரோந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த இரு சக்கர வாகன ரோந்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என்றும் பொதுமக்கள் அவசர உதவிக்கு எந்த நேரத்திலும் காவல்துறையின் இலவச தொலைபேசி எண் 100, செல்போன் எண். 95141 44100 என்ற எண்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக மேற்படி ரோந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக பொதுமக்கள் தகவல் அளிப்பதற்கு செல்போன் எண். 83000 14567 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேற்படி தொலைபேசி எண்களில் தகவல் தருபவர்கள் தங்கள் பெயர்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.