சென்னை : புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில், 350க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இதில் விசாரணை கைதிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை நேரடியாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தப்படுத்தி மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்வது வழக்கம். அவ்வாறு மங்கலம் காவல் நிலையத்தில், போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட முருகன் என்பவர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 9ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் வில்லியனூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தடி அய்யனாரும் சென்று உள்ளார். அப்போது கழிவறைக்குள் சென்ற முருகன், 15 சென்டிமீட்டர் அளவுக்கு பிளாஸ்டிக்கில் சுற்றிய 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை எடுத்து ஆசனவாய்க்குள் வைத்துக்கொண்டார்.
மீண்டும் இருவரும் சிறைச்சாலைக்கு வந்தபோது சிறை காவலர் ஷாஜகான் பரிசோதித்தபோது விசாரணை கைதி முருகன் கஞ்சா பொட்டலத்தை ஆசனவாயில் வைத்து இருப்பது கண்டறிப்பட்டது. இது குறித்து முருகனிடம் விசாரணை மேற்கொண்டதில், தடி ஐயனார் தான் கஞ்சாவை கடத்த தனக்கு உத்தரவிட்டதாக தெரிவித்தார். இதனை கைப்பற்றிய காவல்துறையினர் முருகன் மற்றும் அவருக்கு உத்தரவிட்ட தடி ஐயனார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிகவும் பாதுகாப்பான நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் இருந்து சிறைச்சாலைக்குள் கஞ்சா கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.