சென்னை : சீருடை பணியாளர் தேர்வாணையம், நடத்தும் காவலர், சிறை காவலர், மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வுக்கு அரசின் போட்டி தேர்வு மையங்களில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
போட்டித் தேர்வு பயிற்சி : போட்டித் தேர்வுகளில், கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி ஆகிய மையங்களில், கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடந்து முடிந்த தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் தொகுதி 4 கான எழுத்து தேர்வுக்கு இப்பயிற்சி மையங்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர்.
விண்ணப்பிக்க அழைப்பு : தற்போது சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைகாவலர், மற்றும் தீயணைப்பாளர், ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்ப படிவம் ஆகியன www.civilservicecoaching.com என்ற இணையத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் மேற்படி இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய சான்றிதழ் உடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 14-ஆம் தேதிக்குள் பயிற்சி மையங்களில் நேரடியாக அளிக்கலாம். விவரங்களுக்கு 044-24621475 மற்றும் 044-24621475 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாதிரி தேர்வுகள் : இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விவரங்கள் மற்றும் செயற்கை குறித்த நாள் ஆகியவற்றை மேற்படி இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். அழைப்பு கடிதம், தபால் வழியாக அனுப்பி வைக்கப்பட மாட்டாது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்று தற்போது பணியில் இருக்கும் அரசு அலுவலர்களை கொண்டு அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெறுபவர்களுக்கு வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். காத்திருப்பு தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான நாட்கள் காலியிடங்களுக்கு ஏற்ப இணைய வழியாக தெரிவிக்கப்படும் பயிற்சி வகுப்புகள் வருகிற 21-ஆம் தேதி தொடங்குகிறது. மேற்கண்ட தகவல்களை தலைமை செயலாளர் திரு. வெ.இறையன்பு, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.